பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 13 வயது சிறுமியின் 28 வார கருவைக் கலைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதில் அவர் கர்ப்பமானார். இதையடுத்து சிறுமியின் கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என சிறுமியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தோஸ், மருத்துவர்கள் சமர்ப்பித்த மருத்துவ மற்றும் சாத்தியக்கூறு அறிக்கையின் அடிப்படையில் கூடுதல் அதிகாரத்தைப் பயன்படுத்தி 28 வாரம் 3 நாள்கள் உள்ள சிறுமியின் கருவைக் கலைக்க அனுமதி அளித்துள்ளார்.
அந்த வகையில் இந்த வழக்கில் நீதிபதி, 'சிறுமிக்கு 13 வயதுதான் ஆகிறது என்பதால் அவரது உடல்நலம் மற்றும் மனநலத்தைக் கருத்தில் கொண்டு அரசியலமைப்பின் 226 வது பிரிவின் கீழ் பாதிக்கப்பட்ட சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதியளிக்கப்படுறது.
கர்ப்பத்தைத் தாங்கும் அளவுக்கு சிறுமிக்கு உடல் மற்றும் மன வலிமை இல்லை. மேலும், சிறுமி குழந்தையை பெற்றெடுத்தால் சிறுமி மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்படும் என்ற விவசாயத் தொழிலாளியான அவரது தந்தையின் கூற்றை கருத்தில்கொண்டும் இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது' என்று தெரிவித்தார்.
மேலும் சிறப்பு அரசு மருத்துவர்கள் குழுவை நியமித்து கருக்கலைப்பு செய்யவும் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைகளுக்காக கருவைப் பாதுகாக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ள்ளார். அதுமட்டுமின்றி, திருவண்ணாமலை குழந்தைகள் நல அமைப்பு, சிறுமிக்கும் அவரது குடும்பத்திற்கும் தேவையான வசதிகளை செய்துதருமாறு கூறி வழக்கை ஜூலை 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
1971 ஆம் ஆண்டு மருத்துவக் கருக்கலைப்புச் சட்டப் பிரிவு 3(2)இன் படி, 20 வாரங்களுக்கு குறைவாக உள்ள கருவை மருத்துவர்களின் பரிந்துரை மற்றும் ஆலோசனையின்பேரில் கலைக்க அனுமதிக்கப்படுகிறது, 20 வாரங்களுக்கு அதிகமாக இருந்தால் நீதிமன்றம் தலையிடலாம்.