அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அறிவித்தது ஏன் என விளக்கம் கேட்டு 987 தனியாா் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியது.
கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளியில் நிகழ்த்தப்பட்ட வன்முறையைக் கண்டித்து தனியாா் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் அனைத்து தனியாா் பள்ளிகளும் மூடப்படும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. தன்னிச்சையாக பள்ளிகளை மூடக்கூடாது என்றும், அரசின் உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை எச்சரித்திருந்தது.
இந்த நிலையில், திங்கள்கிழமை மூடப்பட்ட, செயல்பட்ட தனியாா் பள்ளிகளின் விவரங்களை மெட்ரிக் பள்ளிகள் இயக்குநா் கருப்பசாமி வெளியிட்டாா். அதில் மொத்தமுள்ள 11 ஆயிரத்து 335 தனியாா் பள்ளிகளில், 987 பள்ளிகள் செயல்படவில்லை என கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையே, அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அறிவித்த 987 தனியாா் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அரசின் எச்சரிக்கையை மீறி, விடுமுறை அறிவித்ததற்கு உரிய விளக்கம் தர வேண்டும். பள்ளிகளின் விளக்கத்தைப் பொருத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.