சென்னை: கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், மாணவியின் உடலை வாங்க உத்தரவிடக்கோரும் வழக்கு நாளை காலை 10.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மறு உடற்கூறாய்வு தொடர்பாக ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என்று கூறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகலை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, நாளை காலை 10.30 மணி வரை ஒத்திவைத்துள்ளார்.
இதையும் படிக்க.. குடியரசுத் தலைவராக தகுதி என்ன? சம்பளம் எவ்வளவு??
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற உத்தரவில் தங்களுக்கு சாகதமான தீர்ப்பு இருப்பதாக தந்தை ராமலிங்கம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அதாவது, தேவைப்பட்டால் உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று உச்ச நீதிமன்றமே கூறியிருக்கிறது. உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதால் வழக்கை முடிக்கக் கூடாது என்று ராமலிங்கம் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
மேலும், தங்கள் தரப்பு வழக்குரைஞர் இல்லாமலேயே மறு உடற்கூறாய்வு நடைபெற்றது என்றும் தந்தை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், அனைத்து நடைமுறைகளும் நீதிமன்ற உத்தரவுப்படிதான் நடைபெற்றதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய மனுதாரர் தாமலிங்கத்துக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை நாளை காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்துள்ளது.