வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சித்த இளைஞரை வாழப்பாடி போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதன்கிழமை நள்ளிரவு 2 மணி அளவில் வாழப்பாடி உதவி காவல் ஆய்வாளர் மணிகண்டன், காவலர் வெங்கடேஷ் ஆகியோர் பேளூரில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பேளூரில் அயோத்தியாப்பட்டணம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏடிஎம் மையத்திற்குள் மர்ம நபர் புகுந்து, இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையும் படிக்க | குரூப் 1 தேர்வு அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி வெளியீடு
இதனைக் கண்ட போலீசார் அந்த மர்ம நபனை சுற்றி வளைத்து கையும் களவுமாக மடக்கிக் பிடித்தனர். அவரிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் வாழப்பாடி அருகே குறிச்சி ஊராட்சி கோணஞ்செட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ராமச்சந்திரன்(22) என்பது தெரியவந்தது.
அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த இளைஞரை கையும் களவுமாக பிடித்த போலீசாருக்கு அப்பகுதி பொதுமக்களும், காவல்துறை உயர் அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.