கள்ளக்குறிச்சி, கனியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி(17), கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தநிலையில் கடந்த 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
மாணவி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுத்து வந்தனர். இதனால் கடந்த 10 நாள்களாக மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதனையொட்டி வெள்ளிக்கிழமை இரவு முதல் கள்ளக்குறிச்சி மருத்துவமனை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
சனிக்கிழமை காலை 6.45 மணி அளவில் தொழிலாளர்கள் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், எம்எல்ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் முன்னிலையில் மாணவி ஸ்ரீமதியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக்கொண்டனர். மேலும், அமைச்சர் கணேசன், எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், அவசர ஊர்தி மூலமாக மாணவி உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள மாணவியின் சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் உடன் சென்றனர்.
இதையடுத்து உறவினர்கள், உள்ளூர் மக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு அவரது குடும்ப முறைப்படி இறுதிச்சடங்கு செய்யப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, மாணவியின் இறுதிச்சடங்கையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் குறிப்பாக பெரியநெசலூர் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். நான்கு அடுக்கு சோதனைச் சாவடி, இறுதிச் சடங்கில் கிராம மக்களுக்கு மட்டுமே அனுமதி என பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.