வரி செலுத்துபவராக இருப்பதை நினைத்து பொதுமக்கள் பெருமை கொள்ள வேண்டும் என்று தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற வருமான வரி தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய அவர், வருமான வரித்துறையின் நோக்கம் நாட்டின் நலனே தவிர, வரி செலுத்துவோருக்கு சுமை ஏற்படுத்துவது அல்ல. நாம் செலுத்தும் வரி நாட்டின் வளர்ச்சிக்கானது.
2025-ஆம் ஆண்டில் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா ஈட்ட வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கனவை அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்ற வேண்டும். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலோடு, பொதுமக்களுடன் நெருங்கி பணியாற்றுவதற்கான ஏராளமான புதுமையான நடவடிக்கைகளை வருமானவரித்துறை மேற்கொண்டுள்ளது.
வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதோடு, பலர் தன்னார்வமாக வரி செலுத்த முன்வருவதிலிருந்து இதன் தாக்கம் புலனாகிறது. வரி செலுத்துபவர்களையும், வருமான வரி அதிகாரிகளையும் நிகழ்ச்சியின்போது கௌரவித்த வருமான வரித் துறைக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.