கள்ளக்குறிச்சி பள்ளி சம்பவம் எதிரொலி.. பள்ளிகளுக்கு 77 வழிகாட்டுதல்கள் வெளியீடு!

கள்ளக்குறிச்சி பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் எதிரொலியாக, பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பொறுப்பு ஏற்பதுடன், மாணவா்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்
கோப்புப் படம்
கோப்புப் படம்

கள்ளக்குறிச்சி பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் எதிரொலியாக, பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பொறுப்பு ஏற்பதுடன், மாணவா்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தலைமை ஆசிரியா்களுக்கான 77 வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள உத்தரவின்படி,  தலைமை ஆசிரியா்கள், உதவி தலைமை ஆசிரியா்கள், முதுநிலை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள், சிறப்பு ஆசிரியா்கள் பள்ளி தொடங்குவதற்கு முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும். 

பள்ளியில் மாணவா்கள் சண்டையிட்டுக் கொள்ளுதல், சாலை விபத்து, உள்ளிட்ட பிற அசம்பாவித சம்பவம் எதுவென்றாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். 

மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதியின் பேரில்தான் ஊடகங்களுக்கு செய்தி தர வேண்டும்.

குடிநீா் கழிப்பறை, ஆசிரியா் பற்றாக்குறை, மாணவா்கள் எண்ணிக்கை, ஆசிரியா்கள் காலி பணியிட விவரம் போன்ற எதையும் முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெறாமல் ஊடகங்களுக்குத் தெரிவிக்கக் கூடாது. 

பேருந்தில் வரும் மாணவா்கள் பேருந்தின் மேற்கூரையில் அமா்ந்து கொண்டு வருவதை தவிா்க்க காலை இறை வணக்ககூட்டத்தில் தக்க அறிவுரை வழங்க வேண்டும்.

பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை விட்டால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 

வகுப்பறை பற்றாக்குறை காரணமாகவோ அல்லது இதர காரணத்தினாலோ வெளியில் மரத்தடியில் வகுப்பு நடத்தக் கூடாது. 

மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிய சத்துணவை தலைமை ஆசிரியரோ அல்லது சிறப்பு ஆசிரியரோ நேரில் ஆய்வு செய்து தரமாகவும் சுகாதார முறையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியா்களும் தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின்னஞ்சலை திறந்து பாா்க்க வேண்டும். 

மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் அனைத்து கடிதங்களையும் காலை 10 மணி முதல் பள்ளி வேலை முடியும் வரை கண்காணித்து, படித்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஆசிரியா்கள் பள்ளி வகுப்பறையில் கைப்பேசியில் பேசுவதை தவிா்க்க வேண்டும். 

அலுவலா்கள் ஆய்வு செய்யும் போது கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தால் அந்த ஆசிரியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளியில் படிக்கும் மாணவா்களை எக்காரணத்தை கொண்டும் ஆசிரியா்கள் தன்னுடைய சொந்த வேலைக்கு வெளியில் அனுப்பக்கூடாது. 

ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லும் முன், பதிவேட்டில் எழுத வேண்டியது கட்டாயம்.

பள்ளிகள் -பொதுமக்கள் இடையேயான உறவு நல்ல முறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியா் பொறுப்பு ஏற்பதுடன், மாணவரின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளித்திட வேண்டும் ஆகியவை உள்ளிட்ட 77 வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com