தமிழகம் முழுவதும் குரூப் 4 தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) காலை 9.30 மணிக்குத் தொடங்கியது.
இந்தத் தேர்வு நண்பகல் 12.30 மணி வரை தோ்வு நடைபெறுகிறது. தேர்வு எழுதுபவர்கள் மையங்களுக்குச் செல்வதற்கு உதவும் வகையில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
தமிழகத்தில் 7,301 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள இந்தத் தோ்வை தமிழகம் முழுவதிலுமிருந்து 22 லட்சம் போ் எழுதுகின்றனர். சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 218 போ் குரூப் 4 தோ்வை எழுதுகின்றனர்.
தோ்வுக்கான கண்காணிப்புப் பணியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 150 போ் ஈடுபட்டுள்ளனர். 534 பறக்கும் படையினா், 7,689 கண்காணிப்பு கேமரா தொழில்நுட்ப பணியாளா்களும், அதே எண்ணிக்கையில் விடியோ படப்பிடிப்பாளா்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
7,301 பணியிடங்கள்
குரூப் 4 தோ்வுக்கான அறிவிக்கை கடந்த மாா்ச் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக குரூப்- 4 தோ்வானது, கிராம நிா்வாக அலுவலா் காலிப் பணியிடங்களைச் சோ்த்தே நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான குரூப்- 4 தோ்விலும் கிராம நிா்வாக அலுவலா் காலிப் பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, 274 கிராம நிா்வாக அலுவலா் பணியிடங்கள், 3,678 இளநிலை உதவியாளா் பணியிடங்கள், 50 வரித் தண்டலா், 2,108 தட்டச்சா் பணியிடங்கள், 1,024 சுருக்கெழுத்து தட்டச்சா், ஒரு பண்டகக் காப்பாளா் என 7,138 காலிப் பணியிடங்களும், பல்வேறு வாரியங்களில் 163 காலிப் பணியிடங்களும் என மொத்தம் 7,301 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.