அதிமுக தலைமை அலுவலகத்தில் பொருள்கள் திருடப்பட்ட புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி தமிழக டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி ஓ. பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பொருள்கள், பத்திரங்கள் உள்ளிட்டவை திருடிச் சென்றதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தெடுக்கப்பட்டுள்ள இபிஎஸ் தரப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில், புகாரின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், புகாரை சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி காவல்துறை டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இபிஎஸ் தரப்பில் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் இன்று மனு அளித்துள்ளார்.