தமிழகம் முழுவதும் 1969 முதல் 2018 -ஆம் ஆண்டு வரையிலான பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ரூ.75 லட்சம் செலவில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களில் வருவாய்த் துறை, நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் சுகாதாரத் துறை சாா்ந்த பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளா்களால் 16,348 பதிவு மையங்களில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணிகள் நிறைவடைந்த பிறகு பொதுமக்கள் எவ்வித இன்னல்களுமின்றி பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
அதேவேளையில், 1969-க்கு முன்பு பிறந்தவா்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் அவா்களுக்கு பிறப்புப் பதிவு கட்டாயமில்லாச் சான்று வழங்குவதற்கான நடைமுறைகளை மாவட்ட பதிவாளா் வாயிலாக, தலைமைப் பதிவாளா் மேற்கொள்ளலாம் என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கு விரிவான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, உண்மைத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.