ஆடி அமாவாசை: சொரிமுத்து அய்யனார் கோயிலில் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபாடு

ஆடி அமாவாசையை முன்னிட்டு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து வழிபட்டனர்.
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசைக்கு குவிந்த பக்தர்கள்
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசைக்கு குவிந்த பக்தர்கள்

அம்பாசமுத்திரம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து வழிபட்டனர்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் முண்டந்துறை வனச்சரகத்திற்குள்பட்ட காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் தை அமாவாசை, ஆடி அமாவாசை நாள்களில் பக்தர்கள் விரதமிருந்து பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவர். 

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்ததால் கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப்பின் கோயிலில் வழிபட அனுமதியளித்ததையடுத்து நிகழாண்டு ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வந்தனர். 

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் குடும்பத்துடன் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வந்திருந்தனர்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், தளவாய் மாடசாமி, தூசி மாடசாமி, பட்டவராயர், இசக்கியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. 

ஜூலை 26 முதல் பக்தர்கள் வனப்பகுதியில் பல்லாயிரம் பக்தர்கள் குடில் அமைத்து தங்கியிருந்து விரதமிருந்து இசக்கி அம்மனுக்கு பொங்கலிட்டும் பட்டவராயருக்கு ஆடு பலியிட்டும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

வியாழக்கிழமை இரவு பட்டவராயர் சன்னதி முன்பு விரதமிருந்த பக்தர்கள் தீக்குழி இறங்கினர்.

காரையாறு தாமிரவருணியில் ஆடி அமாவாசைக்குப் புனித நீராடும் பக்தர்கள்.

பக்தர்கள் வந்த கார், வேன், தனியார் பேருந்து உள்ளிட்டவை அகஸ்தியர் பட்டியில் நிறுத்தப்பட்டன. அகஸ்தியர் பட்டியிலிருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் காரையாறுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம் துணை இயக்குநர் செண்பகப்ரியா, முண்டந்துறை வனச்சரகர் (பொ) சரவணக்குமார் தலைமையில் வனத்துறையினரும், அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரான்சிஸ் தலைமையில் போலீஸார், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com