நாகர்கோவில்: ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் வியாழக்கிழமை அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் நீராடி தங்கள் முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தனர்.
கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடி அமாவாசை நாளில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நிகழாண்டு கரோனா விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் குமரி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளம் மாநிலத்திலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம்
கொடுப்பதற்கு வந்திருந்தனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நீத்தார் நினைவு பலி கர்ம பூஜைகளை செய்யும் மக்கள்.
கடற்கரையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் அமர்ந்து பொதுமக்களுக்கு மந்திரம் ஓதி நீத்தார் நினைவு பலி கர்ம பூஜைகளை செய்தனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
பொதுமக்களின் வசதிக்காக மாவட்டம் முழுவதும் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டன.
இதேபோல் குழித்துறை தாமிரவருணி ஆற்றின் கரையிலும் ஏராளமான பொதுமக்கள் பலி கர்ம பூஜை செய்தனர்.