சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடக்கி வைப்பதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் மோடி ஆளுநர் மாளிகையில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க | சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவைத் தொடர்ந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு ஏற்கெனவே திட்டமிட்டபடி தமிழக பாஜக நிர்வாகிகளை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.