ஸ்ரீமதி மரணம்: பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் மறுப்பு

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீமதி மரணம்: பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் மறுப்பு

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி(17) மர்மமான முறையில் கடந்த 13 -ஆம் தேதி பள்ளியில் உயிரிழந்து கிடந்தார். இது குறித்து மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரில் சின்னசேலம் காவல்துறையினர் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸார் ஒப்படைக்கப்பட்டது‌.

பின்னர் இந்த வழக்கு தற்கொலைக்கு தூண்டியதாக மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, பள்ளி கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

மாணவி உயிரிழப்பை தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதால் இவ்வழக்கு தமிழக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மாணவி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையிலிருக்கும் பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, பள்ளி கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல்  நீதிமன்றத்தில் நீதிபதி மன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை நேற்று புதன்கிழமை விசாரித்த நீதிபதி புஷ்பராணி,  வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், ஆசிரியர்கள் 2 பேர் என மொத்தம் 5 பேரையும் சிபிசிஐடி போலீஸார் ஒரு காவல் காவல் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து நேற்று வியாழக்கிழமை விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தியிடம் பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும் உடல்நலத்தைக் காரணம் காட்டி ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், இன்று மனுவை விசாரித்த நீதிபதி, மாணவி மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளதால் தற்போதைய மனுவை நிராகரித்து ஜாமீன் தர மறுத்துள்ளார். மேலும், சிபிசிஐடியின் முதல் தாக்கல் அறிக்கையை வைத்து புதிதாக ஜாமீன் மனுவை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com