ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு, ஐயாறப்பர் கோயில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தருமை ஆதினத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி உடனான ஐயாறப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். அதேபோல் இந்தாண்டு மஹோத்சவம் விழா கடந்த 26ம் தேதி கொடி ஏற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஆடி அமாவாசை அன்று தீர்த்தவாரியும், அன்று மாலை அப்பர் திருக்கயிலாய காட்சியும் நடைப்பெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூர திருத்தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைப்பெற்றது. தொம்பை தோரணங்கள், வாழை கன்று. வேப்பிள்ளை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அறம்வளர்த்த நாயகி எழுந்தருளி இராஜ வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாளித்தார். கோவில் கிழக்கு வாசலில் அமைந்துள்ள தேரடியில் இருந்து திருத்தேர் புறப்பட்டது. ஆடிப்பூர பெண்களுக்கான விழா என்பதால் திருத்தேரை பெண்கள் மட்டுமே இழுத்து சென்றனர். யானை முன் செல்ல தேர் நான்கு மாட வீதியில் வலம் வந்தபோது பக்தர்கள் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து வழிப்பட்டனர்.