அம்பாசமுத்திரம் கோமதியம்பாள் சமேத ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி கோயிலில் ஆடித் தபசுத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அம்பாசமுத்திரம் தாமிரவருணிக் கரையில் அமைந்துள்ள கோமதியம்பாள் சமேத ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி கோயிலில் ஆடித் தவசு திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம் நடைப்பெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு ஞாயிறு காலை சுவாமி அம்பாளுக்கு சிறப்ப அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. 11.15 மணிக்கு மேல் கொடியேற்றப்பட்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
தொடர்ந்து நாள்தோறும் காலை மற்றும் மாலைசுவாமி அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது. 10ஆம் நாளான ஆகஸ்ட் 9 செவ்வாய்கிழமை காலை 10.30 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. 11ஆம் நாளான ஆகஸ்ட் 10 புதன்கிழமை காலை 4.30 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையைத் தொடர்ந்து காலை 6.30 மணிக்கு வெள்ளிச் சப்பரத்தில் அம்பாள் தபசுக்கு எழுந்தருளல் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு ஸ்ரீ சங்கரநாராயணர் தரிசனமும், 6.30 மணிக்கு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி அம்பாளுக்கு ரிஷப வாகனத்தில் காட்சி தருதலும் இரவு 9 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. ஆக. 11 வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி தெப்பத் திருவிழா, ஆக. 12 வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சுவாமி தெப்பத் திருவிழாவும் 10 மணிக்கு சுவாமி அம்பாள் வீதி உலாவும் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கரலிங்க சுவாமி கோயில் அறங்காவலர் ஆ. முருகசுவாமிநாதன், அகஸ்தீஸ்வரர் கோயில் அறங்காவலர் ச.சபாபதி ஆகியோர் தலைமையில் நிர்வாகக்குழுவினர் செய்துள்ளனர்.