நெல்லை நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சியுடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றும், ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட தேர் உடைய கோயிலுமான நெல்லை நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா திருகால் நாட்டுதல் திருவிழா வெகு விமரிசையாகத் தொடங்கியது.
இந்த விழாவை முன்னிட்டு அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து திருக்காலுக்கு பூஜைகள் செய்யப்பட்டு கோயில் யானை காந்திமதி முன்செல்ல பந்தல் கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமி சன்னதி தெருவில் உள்ள கோவில் வாசல் மண்டபத்திற்கு அருகே நாட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து பால் மஞ்சள் உள்ளிட்ட அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்புப் பூஜைகளும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆனிப் பெருந்திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான புட்டபர்த்தி அம்மன் திருக்கோவில் திருவிழா வரும் 5ம் தேதியும் விநாயகர் திருவிழா 15ஆம் தேதியும் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி வரும் ஜூலை 3-ம் தேதி கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. ஆனிப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட திருத்தேர் ஓடும் திருவிழா வரும் 11ஆம் தேதி நடைபெற இருக்கிறது.