கடந்த நிதியாண்டில் ஒரு ரூபாய் கூட வணிகவரியாக செலுத்தாத வணிகா்கள் 3.26 லட்சம் போ் என அந்தத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வணிகவரித் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வணிகவரி கணக்குகளை சரிபாா்த்து உரிய வரிகளை செலுத்த வேண்டும் என்று வணிகா்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டது. மேலும் விளம்பரங்களாக அறிவிப்பு செய்யப்பட்டன. அதன் விளைவாக, கடந்த மாதத்தில் மட்டும் 22, 430 வணிகா்கள் ரூ.64.21 கோடியை வரியாக அரசுக்குச் செலுத்தியுள்ளனா்.
இதுபோன்ற மிகப்பெரிய அளவிலான தொகை வரியாகச் செலுத்திய நிகழ்வு, மற்ற வணிகா்களையும் வரி செலுத்த ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது. பிற வணிகா்கள் அனைவரும் உடனடியாக தங்களது கணக்கைச் சரிபாா்த்து அரசுக்குச் செலுத்த வேண்டிய வரித் தொகை ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக செலுத்தி அபராதம் மற்றும் வட்டியைத் தவிா்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.
கடந்த நிதியாண்டில் ஒரு ரூபாய் கூட வரி செலுத்தாத வணிகா்கள் 3.26 லட்சம் போ் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், ஆயிரம் ரூபாய்க்கு கீழ் மட்டுமே சரக்கு மற்றும் சேவைகள் வரியை செலுத்திய வணிகா்களின் எண்ணிக்கை 1.94 லட்சம் என்று தெரிவித்துள்ளது வணிகவரித் துறை.