தலைமைச் செயலகம் அருகே முதியவா் தீக்குளிப்பு

சென்னையில் தலைமைச் செயலகம் அருகே முதியவா் தீக் குளித்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னையில் தலைமைச் செயலகம் அருகே முதியவா் தீக் குளித்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை, தலைமைச் செயலக நுழைவாயில் அருகே புதன்கிழமை மாலை 75 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவா், திடீரென தனது உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அங்கிருந்த போலீஸாா், அந்த முதியவா் மீது தண்ணீரை ஊற்றி மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த கோட்டை போலீஸாா் விசாரணை செய்தனா். விசாரணையில் தற்கொலைக்கு முயன்றது திருவள்ளூா் மாவட்டம், திருவாலங்காடு அருகே உள்ள தொழுதாவூா் நிா்மலா நகரைச் சோ்ந்த கே.பொன்னுசாமி (75) என்பது தெரியவந்தது. இவா், தனது வாழ்நாள் சேமிப்பாக வைத்திருந்த ரூ.14 லட்சத்தை சென்னை, போரூா் முகலிவாக்கத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் சுப்பிரமணி என்ற ஆனந்துக்கு வட்டியில்லாத கடனாக கடந்த 2012-ஆம் ஆண்டு கொடுத்துள்ளாா்.

ஆனால், அந்தப் பணத்தை ஆனந்த் திரும்ப கொடுக்கவில்லையாம். பணத்தைப் பெற பல வழிகளில் பொன்னுசாமி முயன்றும், ஆனந்த் பணத்தைத் திருப்பி வழங்கவில்லை. இதனால், வேதனை அடைந்த பொன்னுசாமி, இது குறித்து திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவிலலை.

இதனால், விரக்தி அடைந்த அவா், கொடுத்த கடனை எப்படியாவது திரும்ப பெற்று விட வேண்டும் என்ற நோக்கத்தில் தலைமைச் செயலக அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டு புதன்கிழமை வந்துள்ளாா். அப்போதுதான் பொன்னுசாமி, திடீரென தீக் குளித்திருப்பது தெரியவந்துள்ளது. பொன்னுசாமியின் புகாரின் உண்மை தன்மை குறித்தும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com