கோவை மருதமலை வி.சி.க. நகர் பகுதியில் உள்ள வீட்டை காட்டு யானைகள் சூறையாடின. அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கோவை மேற்குத் தொடர்ச்சி மலை, மருதமலையடிவாரம் அருகே வழக்கமாக வரும் காட்டு யானைகள் அடிக்கடி வி.சி.க. நகர், இந்திரா நகர், திடீர் குப்பம், உள்ளிட்ட பகுதிகள் வழியாக வந்து மீண்டும் வனப்பகுதிக்குச் செல்லும்.
இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் மலையில் இருந்து குட்டியுடன் இறங்கிய 6 காட்டு யானைகள், வி.சி.க. நகர் அருகே வந்துள்ளன. அங்கிருந்த பாண்டியம்மாள் (65) என்பரது வீட்டின் சுவரை உடைத்து உள்ளே இருந்த பொருட்களையும் யானைகள் சேதப்படுத்தியுள்ளன.
பாண்டியம்மாள் தனது பேரன் ரவிசுந்தருடன் வசித்து வருகிறார். பாண்டியம்மாள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். ரவிசுந்தரும் நேற்று தனது கல்லூரி நண்பர் வீட்டிற்கு தூங்கச் சென்றதால், வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மேலும் அங்கிருந்து நீண்ட நேரத்திற்குப் பின்னரே காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன.