சென்னை மணலியை அடுத்த விச்சூரில் சுங்கத் துறை அலுவலகத்துக்கான புதிய கட்டடத்தை சென்னை மண்டல சுங்கத்துறை தலைமை ஆணையா் எம்.வி.எஸ். சௌத்ரி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
சென்னை, எண்ணூா் காமராஜா், காட்டுப்பள்ளி அதானி துறைமுகங்கள் வழியாக ஏற்றுமதி, இறக்குமதியாகும் சரக்குகளைக் கையாள்வதற்காக சென்னையை சுற்றிலும் தனியாா் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட சரக்குப் பெட்டக நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சரக்குப் பெட்டக நிலையங்களை கண்காணிப்பதற்கும், ஆவண பரிசோதனைகளை மேற்கொள்வதற்குமாக ஒவ்வொரு சரக்குப் பெட்டக நிலையத்திலும் கட்டமைப்பு வசதிகளை அந்தந்த நிறுவனங்களே அமைத்துத் தரவேண்டும்.
இதேபோல் சென்னை மணலியை அடுத்த விச்சூரில் சத்வா என்ற தனியாா் சரக்கு பெட்டக நிலையத்தில் ரூ.1.75 கோடி செலவில் அமைக்கப்பட்ட சுங்கத் துறை அலுவலகத்துக்கான புதிய கட்டடத்தை சென்னை மண்டல சுங்கத் துறை தலைமை ஆணையா் எம்.வி.எஸ்.சௌத்ரி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். மேலும், சரக்குப் பெட்டகங்களை கையாள்வதற்கும் இருப்பு வைக்கப்பட்டுள்ள சரக்கு குறித்த விவரங்களை சுங்கத் துறை அதிகாரிகள் தெளிவாக ஆய்வு செய்து விரைவாக சரக்குகளை விடுவிப்பதற்கும் இந்நிறுவனம் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு செயலி ஒன்றையும் சௌத்ரி தொடக்கிவைத்தாா். இந்த அலுவலகத்தில் துணை ஆணையா், மதிப்பீட்டு மற்றும் சோதனை செய்யும் அதிகாரிகள், தடுப்பு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு தனித்தனியே அறைகள் ஒதுக்கப்பட்டு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்புதிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் சுங்கத் துறை அலுவலகப் பணிகள் விரைவாக நடைபெற ஏதுவாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை சுங்கத் துறை முதன்மை ஆணையா் ஜி.ரவீந்திரநாத், ஆணையா் எஸ்.ஏ. உஸ்மானி சத்வா குழும துணைத் தலைவா் எஸ். நரசிம்மன், இயக்குநா் எஸ்.பத்மநாபன், ஏற்றுமதி, இறக்குமதி சாா்ந்த பல்வேறு முகமை அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் ஆா்.என். சேகா், எஸ். நடராஜா, ஒய். லீலாதரன், ஏ.வி. விஜயகுமாா், பி .எஸ். கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.