24-வது கோடைகால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைக்கு 1.10 கோடி ரூபாய்க்கான காசோலைகளை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று (4.6.2022) தலைமைச் செயலகத்தில், பிரேசில் நாட்டில் நடைபெற்ற 24-வது கோடைகால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி 2022-ல் பதக்கங்கள் வென்ற ஜெ. ஜெர்லின் அனிகா மற்றும் பிரித்வி சேகர் ஆகியோருக்கு 1 கோடியே 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை ஊக்கத் தொகையாக வழங்கினார்.
இதையும் படிக்க.. 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை: கண்காணிப்பில் மருத்துவமனைகள்
பிரேசில் நாட்டில் 24-வது கோடைகால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி–2022 கடந்த 1.05.2022 முதல் 15.05.2022 வரை நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த ஜெ.ஜெர்லின் அனிகா (வயது 18) இறகுப்பந்து போட்டியில் பங்கேற்று ஒற்றையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு மற்றும் குழுப் போட்டி ஆகியவற்றில் 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின், ஜெர்லின் அனிகா அவர்களுக்கு 75 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை ஊக்கத்தொகையாக வழங்கினார். ஜெ. ஜெர்லின் அனிகா, மதுரையில் உள்ள ஔவை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தின் (MISSION INTERNATIONAL MEDALS SCHEME) கீழ் ஆண்டொன்றுக்கு 10 இலட்சம் ரூபாய் நிதியுதவி பெற்றுவரும் விளையாட்டு வீராங்கனை ஆவார்.
மேலும், இந்தப்போட்டிகளில் ஆடவருக்கான டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்குபெற்ற சென்னையைச் சேர்ந்த பிரித்வி சேகர் (வயது 39) இரட்டையர் பிரிவில் 1 வெள்ளிப்பதக்கமும், ஒற்றையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகளில் 2 வெண்கலப்பதக்கமும் என 3 பதக்கங்களை வென்றுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரித்வி சேகர் அவர்களுக்கு 35 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை ஊக்கத்தொகையாக வழங்கினார்.