கன்னியாகுமரி மாவட்டம் கிராத்தூர் பகுதியில் வாகன விபத்தில் உயிரிழந்த நபரது உடலை தோண்டி வேறு இடத்தில் அடக்கம் செய்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கிராத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெஸ்டஸ்(60). இவர் கடந்த மே 12 ஆம் தேதி மார்த்தாண்டம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வாகன விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மே 16 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் அவரது தாய் - தந்தை அடக்கம் செய்யப்பட்டிருக்கும் கல்லறைத் தோட்டத்தின் அருகில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவரது சகோதரரான கிறிஸ்டோபர் என்பவர் அவரது மனைவி மற்றும் ஒரு சிலரோடு வந்து ஜெஸ்டஸின் உடல் அடக்கம் செய்யப்பட்டு இருந்த இடத்திலிருந்து தோண்டி எடுத்து வேறோரு இடத்தில் அடக்கம் செய்ய முயன்றுள்ளார். அதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதனை மீறி கிறிஸ்டோபர் ஜெஸ்டஸின் உடலை தோண்டி எடுத்து மாற்று இடத்தில் சிறிய அளவு பள்ளம் தோண்டி அதில் அடக்கம் செய்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மேலும் இது தொடர்பாக அவரது மகன் ஜெஸ்வின் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.