ஓராண்டுக்குள் 100க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு

திமுக அரசு பொறுப்பேற்ற ஓராண்டுக்குள் 100க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபுவுக்கு நினைவுப் பரிசினை வழங்கிய தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபுவுக்கு நினைவுப் பரிசினை வழங்கிய தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.

திமுக அரசு பொறுப்பேற்ற ஓராண்டுக்குள் 100க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

மரபு வழியை பின்பற்றும் ஆதீனங்களோடு அரசு இணக்கமாக செயல்படுகிறது என தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கூறினார். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் விருந்தினர் மாளிகை திறப்பு விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, ஆதீனத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீகுருஞானசம்பந்தர் அருள் நிலையம் விருந்தினர் மாளிகையை திறந்து வைத்தார். தொடர்ந்து, தருமையாதீனம் சிவனருள் இயக்கத்தின் சார்பில் 27000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். கல்லூரிச் செயலர் இரா.செல்வநாயகம் வரவேற்றார். 

முன்னதாக அமைச்சருக்கு ஆதீன நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.  தொடர்ந்து, தருமபுரம் ஆதீனத்தில் உள்ள தேவாரப்பாடசாலையை அமைச்சர் பார்வையிட்டார். அவருக்கு, பாடசாலை நிர்வாகச் செயலர் பட்டயக் கணக்காளர் குரு.சம்பத்குமார் தலைமையில் மாணவர்கள் தேவாரப் பாடல்களை பாடி வரவேற்பு அளித்தனர். பின்னர், தருமபுரம் ஆதீனம் ஸ்ரீகுருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிக்குச் சென்ற அமைச்சர், பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கடேசனிடம், பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார். பின்னர், ஆதீனத்திருமடத்தில் தருமபுரம் ஆதீனம், அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

தருமபுரம் ஆதீனம்: மரங்கள் இறைவனுக்கு ஒப்பானவை. சிவபெருமான் விஷத்தை தானுண்டு, அமிர்தத்தை தேவர்களுக்கு அளித்ததைப் போன்று, மரங்கள் கார்பன்-டை-ஆக்ஸைடை தான் எடுத்துக்கொண்டு, ஆக்சிஜனை உயிரனங்களுக்கு அளிக்கின்றன. கரோனா காலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பல உயிரிழப்புகள் நேரிட்டன. எனவே, ஆக்சிஜனை உருவாக்கும் மரங்களை அதிகரிக்கும் நோக்கில் தருமபுரம் ஆதீனத்தில் 27000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. இத்திட்டத்தை தொடங்கி வைத்து, தருமபுரம் ஆதீனத்தில் 25 அறைகள் கொண்ட குருஞானசம்பந்தர் அருள்நிலையம் என்ற விருந்தினர் மாளிகையை அறநிலையத்துறை அமைச்சர் திறந்து வைத்துள்ளார்.  தருமபுரம் ஆதீனத்தில் அணையா அடுப்புத் திட்டத்தில் உணவு தயார் செய்யவும் தற்போது விறகுகள் பயன்படுத்தப்படுவது இல்லை. கல்லூரியில் பவளவிழா நிறைவுவிழா ஆகஸ்ட் மாதத்தில் வருகிறது. இவ்விழாவில் தமிழக முதல்வரை அழைத்துவர அறிநிலையத் துறை அமைச்சரிடம் கூறியுள்ளோம். மரபு வழியை பின்பற்றும் ஆதீனங்களோடு, இந்த அரசு இணக்கமாக செயல்படுகிறது என்றார். 

அமைச்சர் பி.கே.சேகர்பாபு: தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் திருப்பணி தொடங்கி, முடிவடையாமல் உள்ள பணிகளை விரைந்து முடிக்கவும், பல ஆண்டுகளாக குடமுழுக்கு நடத்தப்படாமல் உள்ள கோயில்களில் குடமுழுக்கு நடத்தவும்  ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் மார்ச் 27-ஆம் தேதி நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பங்கேற்க ஆதீனத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அப்போது வரமுடியாததால் இன்று அக்கோயிலில் தரிசனம் செய்தேன். இந்த கோயில் மிகத் தூய்மையாகவும், சிறப்பாகவும் பராமரிக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும், ஆதீனத்தில் உள்ள அருங்காட்சியகம், தேவாரப்பாடசாலை, பசுமடம், தொடக்கப்பள்ளி ஆகியவற்றையும் பார்வையிட்டேன். பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு உயர்தரமான உணவு வழங்கப்படுவதோடு தமிழ், ஆங்கில கல்வி கற்றுத் தரப்படுகிறது. பக்தி பசியையும், வயிற்றுப் பசியையும் குருமகா சந்நிதானம் தீர்த்து வைத்துள்ளார். இந்த நட்பு தொடரும். தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் வெள்ளிவிழா, பொன் விழா ஆண்டுகளில் திமுக ஆட்சி நடைபெற்றது. பவளவிழா ஆண்டிலும் திமுக ஆட்சி நடைபெறுவதால் இவ்விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என்ற குருமகா சந்நிதானத்தின் விருப்பத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன். அவரது வழிகாட்டுதலின்படி பவளவிழா சிறப்பாக நடைபெற தமிழக அரசும், அறநிலையத்துறையும் ஒத்துழைப்பு அளிக்கும். 

திமுக அரசு பொறுப்பேற்ற ஓராண்டுக்குள்; 100க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ள நிலையில், 1500 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்துவதாக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் நிகழாண்டிலேயே தொடங்கி விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும். 
ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தொன்மையான கோயில்களுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 80 கோயில்களில் விரைவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். தருமபுரம் ஆதீனத்திற்கு உள்பட்ட 27 கோயில்களில், திமுக ஆட்சியில் 18 கோயில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மலைக் கோயில்களான வெள்ளையங்கிரிநாதர், சதுரகிரி, பேரூர் நரசிம்மன்கோயில், பருவதமலை, கண்ணகி கோயில் ஆகிய 5 கோயில்களில் ஆய்வு செய்வதற்கு ஒரு கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழைமை மாறாமல் பக்தர்கள் மலைக்கோயில்களுக்கு எளிதாக சென்று வழிபடுவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கான குழு அமைக்கப்படும். இந்து சமய அறநிலையத்துறை பொறுத்தவரையில் சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் 2019-ஆம் ஆண்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது. கரோனா தொற்றுக்குப் பிறகு கனகசபையில் தரிசனத்துக்கு அனுமதிக்க மறுக்கப்பட்டதால், கனகராஜ் என்ற வழக்குரைஞர் உயர்நீதிமன்றத்தில் பொதுநலநோக்கோடு முறையீடு செய்ததன் காரணமாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையே தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.

அதுபோல், தருமபுரம் ஆதீனம் நிர்வகிக்கும் கோயில்களில் எந்த புகாரும், சர்ச்சையும் ஏற்படவில்லை. சிதம்பரம் நடராஜர் கோயிலை பொறுத்தவரையில் தீட்சிதர்களுக்குள் உள்ள பிரச்னை, தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பிரச்னைகள் என்று பல புகார்கள் வந்துள்ளது. புகார்கள் குறித்து ஆய்வு செய்யவே அறநிலையத்துறை சார்பில் கடிதம் அனுப்பியுள்ளோம். திருக்கோயிலை அறநிலையத்துறை ஏற்றுகொளும் என்று நாங்கள் கூறவில்லை. பொதுகோயில்களில் புகார்கள் வந்தால் அதனை விசாரிக்க அறநிலையத்துறைக்கு உரிமை உண்டு. இது தீட்சிதர்களுக்கு, தில்லை நடராஜர் கோயில் நிர்வாகத்துக்கும் எதிரான நடவடிக்கை இல்லை. சிறந்த முறையில் நடைபெறும் நிர்வாகம், கோயில்களை அறநிலையத்துறை கையில் எடுக்க முயற்சிக்கக் கூடாது என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

சட்டத்திற்கு புறம்பான செயல்கள், புகார்கள் இருந்தால் தான் அந்த கோயில்கள் குறித்து விசாரணை நடத்துவோம். இறையன்பர்களின் மகிழ்ச்சிதான் அறநிலையத்துறையினர் மகிழ்ச்சி என்றார். நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிவேதா எம்.முருகன், எம்.பன்னீர்செல்வம், எஸ்.ராஜகுமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெகவீரபாண்டியன், நகராட்சித் தலைவர் என்.செல்வராஜ், அரசு வழக்குரைஞர் ராம.சேயோன், ஆதீன தலைமை கண்காணிப்பாளர் சி.மணி, ஆதீன பொதுமேலாளர் கோதண்டராமன், கல்லூரி முதல்வர் சி.சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com