திருநெல்வேலி: திருநெல்வேலியில் உள்ள புகழ்பெற்ற பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா இரு ஆண்டுகளுக்கு பின்பு நிகழாண்டில் கோலாகலமாக நடைபெறுகிறது. 41 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் தொடக்க நிகழ்வாக, நெல்லையப்பர் திருக்கோயிலின் வடக்கு திசையில் அமைந்துள்ள ஊர் காவல் தெய்வமான பிட்டாபுரத்தி அம்மன் கோயில் திருவிழா நடைபெறும்.
அதன்படி, பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோயில் நடை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி கொடிப்பட்டத்தை சுமந்துகொண்டு ரத வீதிகளில் வலம்வந்து கோயிலை வந்தடைந்தது.
பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பின்னர், கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று வேதமந்திரங்களுடன் கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
திருநெல்வேலி, தச்சநல்லூர், பேட்டை சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கொடியேற்றத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் சிகர நிகழ்வாக இம் மாதம் 7 ஆம் தேதி அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து காட்சியளிக்கிறார். 14 ஆம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து நெல்லையப்பர் கோயிலில் விநாயகர் திருவிழா கொடியேற்றம் இம் மாதம் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையும் படிக்க | திருப்புவனத்தில் திமுக சார்பில் மாட்டு வண்டிப் பந்தயம்