மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டதற்காக பாஜக இளைஞரணியைச் சேர்ந்த ஹர்ஷித் ஸ்ரீவத்சவாவை கான்பூர் காவல் துறையினர் கைது செய்தனர்.
இஸ்லாமிய இறைத் தூதரான நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவுக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து பாஜகவிலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். விசாரணைக்கு ஆஜராக ஜூன் 22 ஆம் தேதி வரை அவருக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று பாஜக தில்லி ஊடகப் பிரிவு தலைவா் நவீன் குமாா் ஜிண்டால் ட்விட்டரில் நபிகள் நாயகத்துக்கு எதிராக சா்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டதற்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
பாஜகவினரின் இந்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கான்பூரில் இஸ்லாமிய அமைப்பினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
கான்பூர் கலவரத்தில் தொடர்புடையதாக இதுவரை 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநில பாஜக இளைஞரணியின் மாவட்ட முன்னாள் செயலாளர் ஹர்ஷித் ஸ்ரீவத்சவா சுட்டுரையில் மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக எழுந்த புகாரில் கான்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீவத்சவாவை கைது செய்துள்ளனர்.