சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கும் கீழ் நகைக் கடன் பெற்ற 100 சதவீதம் பேருக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி இன்று அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கும் கீழ் தங்க நகைக் கடன் பெற்றிருந்த 14.40 லட்சம் பேரின் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டு, உரியவர்களிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் 5 சவரனுக்குள்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவிப்பு வெளியிட்டாா். இதைத் தொடா்ந்து, போலி நகைகள், முறைகேடாக நகைக்கடன்கள் பெற்றவா்களை அடையாளம் காண ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிக்க.. பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய 15 விஷயங்கள்
தொடர்ந்து, தகுதியான நபா்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கு சான்றிதழ், நகைகள் பயனாளிகளுக்கு திருப்பியளிக்கப்பட்டு வந்தது.
தமிழ்நாடு முழுவதும் சுமாா் 14 லட்சத்து 51 ஆயிரத்து 42 பயனாளிகளுக்கு ரூ.5,296 கோடி அளவுக்கு 5 பவுனுக்குள்பட்ட நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது வரை, தகுதியுள்ள 14 லட்சத்து 40 ஆயிரம் பயனாளிகளுக்கும் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதாவது, தகுதி வாய்ந்த 100 சதவீதம் பேருக்கும் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் ஐ.பெரியசாமி.