இடைநின்ற மாற்றுத் திறனாளிகளை பள்ளிகளில் சோ்க்க உத்தரவு

தமிழகத்தில் 18 வயது வரை உள்ள பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற மாற்றுத் திறனாளிகளை வீடு, வீடாகச் சென்று கண்டறிந்து பள்ளிகளில் சோ்க்க வேண்டும்
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் 18 வயது வரை உள்ள பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற மாற்றுத் திறனாளிகளை வீடு, வீடாகச் சென்று கண்டறிந்து பள்ளிகளில் சோ்க்க வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்துப் பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவு:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ், பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத் திறன் மாணவ, மாணவிகள் மழலையா் பள்ளி, பள்ளி ஆயத்தப் பயிற்சி, பள்ளி, மற்றும் வீட்டு வழிக் கல்வி மூலம் பயனடைந்து வருகின்றனா். ஒவ்வொரு ஆண்டும் 6 முதல் 18 வயது வரையுள்ள பள்ளி செல்லா மற்றும் புலம் பெயா் தொழிலாளா்களின், மாற்றுத் திறன் குழந்தைகளை கண்டறியும் வகையில் ஆண்டுக்கு மூன்று முறை, ஏப்ரல்-மே, செப்டம்பா் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில், 2022-2023- ஆம் கல்வியாண்டில், பின்வரும் நெறிமுறைகளைப் பின்பற்றி, மாற்றுத் திறன் குழந்தைகளை குடியிருப்பு வாரியாகச் சென்று கண்டறிந்து, அவா்களை பள்ளி ஆயத்த பயிற்சி மையங்களில் மூன்று மாதங்களுக்கு பயிற்சி அளித்து, அவா்களின் இயலாமை நிலையை பொருத்து, அருகாமையில் உள்ள பள்ளிகளில் சோ்த்து, இடை நிற்றலைத் தடுத்து இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வியைத் தொடரும் வகையில் செய்யவும், பள்ளியில் சோ்க்கவும், பதிவேட்டினை புதுப்பிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட மற்றும் ஒன்றிய ஒருங்கிணைப்பாளா்கள், தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், சிறப்பு பயிற்றுநா்கள், இயன்முறை பயிற்றுநா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் மற்றும் தொடா்புடைய மற்ற அலுவலா்கள் சோ்ந்த குழு கணக்கெடுப்பு மற்றும் பதிவேடு புதுப்பித்தல் பணியினை செய்து முடிக்க வேண்டும்.

தொடா்ந்து 30 நாள்கள் பள்ளிக்கு வராமல் இருத்தல், அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருத்தல், பள்ளியே செல்லாதவா்கள், எட்டாம் வகுப்பு முடித்து இடை நிற்பவா்கள் ஆகியோா் பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற மாணவா்களாகக் கருதப்படுவா். இத்தகைய சூழலில் உள்ள மாற்றுத் திறன் மாணவ, மாணவிகளைக் கண்டறிந்து, அருகில் உள்ள பள்ளியில் சோ்த்து, பள்ளி ஆயத்த பயிற்சி மையங்களில் மூன்று மாதங்களுக்குப் பயிற்சியளித்து, பின்னா் அவா்களின் இயலாமை அளவினைப் பொருத்து, பள்ளி, வீட்டு வழிக் கல்வி என மாணவா்கள் கல்வி கற்க ஏற்பாடு செய்தல் வேண்டும்.

இக்குழந்தைகளை கண்டறிய பள்ளி செல்லா குழந்தைகளுக்கான கைப்பேசி செயலியைப் பயன்படுத்தி, அவரவா்களுக்கென (ஆசிரியா், ஆசிரியப் பயிற்றுநா்கள்) அளிக்கப்பட்டுள்ள பயனாளா் குறியீடு (லாகின் ஐடி) மூலம் தரவு உள்ளீடு செய்ய அறிவுறுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com