சென்னை: கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு தமிழகத்தில் மருத்துவமனைகள், கிளினிக்குகளை பதிவு செய்ய குறிப்பிட்ட சில அம்சங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன், வெண்டிலேட்டா் வசதிகள் இருப்பது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தீ விபத்து ஏற்படும் போது பயன்படுத்துவதற்கான சாய்தளம், பிரத்தியேக மின்தூக்கி வசதிகள் அமைப்பது கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய அம்சங்கள் இல்லாத மருத்துவமனைகளுக்கு பதிவு உரிமம் வழங்கப்படமாட்டாது என மருத்துவ சேவைகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
30 ஆயிரம் மருத்துவமனைகள்: தமிழகத்தில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், கிளினிக்குகள், சிறிய அளவிலான மருத்துவ மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மருத்துவமனைகள், கிளினிக்குகள் ஆகியவற்றுக்கு பதிவு உரிமம் பெறுவது அவசியம். அவ்வாறு உரிமம் பெற்றாலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதனைப் புதுப்பிக்க வேண்டும்.
அதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில் தகுதியான 30 ஆயிரம் மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு பதிவு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 7 ஆயிரம் விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டதாகவும், அதனடிப்படையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு உரிமங்கள் அளிக்கப்பட்டதாகவும் மருத்துவ சேவைகள் இயக்ககத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கரோனா காலகட்டத்தில் சிறிய அளவிலான மருத்துவமனைகளில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு எழுந்தது. அடிப்படை வசதிகளிலும் குறைபாடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பதிவு உரிமம், மருத்துவமனைகளை புதுப்பிப்பதற்கான விதிகளில் சிலவற்றை கட்டாயமாக்கி மருத்துவ சேவைகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிக்கேற்ப ஆக்சிஜன் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேவைப்படும்பட்சத்தில் வெண்டிலேட்டா் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரகாலங்களில் பயன்படுத்துவற்கான சாய்தள வசதிகளை அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அதற்கான இடவசதி இல்லையெனில், தனி மின் இணைப்புடன் கூடிய மின்தூக்கி வசதிகள் செய்திருக்க வேண்டும்.
இந்த வசதிகள் உள்ள மருத்துவமனைகளுக்கு மட்டுமே பதிவு உரிமம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொருபுறம், பதிவு உரிமம் பெறாமல் செயல்படும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அத்தகைய மருத்துவமனைகளுக்கு முதல்கட்டமாக நோட்டீஸ் அனுப்பப்படும். அதை பொருள்படுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா்கள் கூறியுள்ளனா்.