ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேருக்கு நாள் செய்யும் விழா வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் பூர நட்சத்திரம் ஆண்டாள் அவதரித்த தினமாகும். அன்றைய நாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறும்.
கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேரோட்டம் உள்பட எந்தவொரு நிகழ்ச்சியும் நடைபெற வில்லை. தற்போது, கரோனா தொற்று குறைந்ததன் காரணமாக தற்போது தமிழகம் முழுவதும் கோயில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான கொடியேற்றம் ஜீலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனைத்தொடர்ந்து தேருக்கு நாள் செய்யும் விழா ஆண்டாள் கோயிலுக்கு எதிரே உள்ள தேர் நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெறுவதால் தேருக்கு அருகே கோயில் அர்ச்சகர்கள் சிறப்பு யாகங்களும், ஹோமங்களும் வளர்த்து அதன் பின்னர் சிறப்பு பூஜை செய்தனர். காலையில் நடைபெற்ற நாள் செய்யும் விழாவில் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து பங்கேற்றனர்.
இதில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா ஆகியோர் கலந்துகொண்டு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.