கம்பம்: இடுக்கி மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் எதிரொலியாக, தேனி மாவட்ட எல்லையான குமுளி, கம்பமெட்டு பகுதிகளுக்கு தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டம் சுழலியல் உணர்திறன் மண்டலமாக செயல்படுத்த 1 கிலோமீட்டர் தொலைவில் வனப்பகுதியை விட்டு, மக்கள் வாழ்விடங்களை மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் எதிரொலியாக, உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
காலை 6 மணிக்கு வேலை நிறுத்தம் தொடங்கியது, இதனால் தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு செல்லும் குமுளி, கம்பமெட்டு மலைச்சாலைகள் அடைக்கப்பட்டது. குமுளி, வண்டிப் பெரியாறு, சாஸ்தா நடை, நெடுங்கண்டம், கட்டப்பனை, உள்ளிட்ட ஏலத்தோட்ட பகுதிகளுக்கு செல்லும் தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்படவில்லை. தேனி மாவட்டம் வரும் கேரளம் மாநில பேருந்துகளும் வரவில்லை.
கம்பம், கூடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான ஆண், பெண் கூலித் தொழிலாளர்கள் இடுக்கி மாவட்டத்தில் ஏலத்தோட்ட வேலைகளுக்கு செல்லவில்லை.
சர்வதேச சுற்றுலா தலமான குமுளியில் அரசு, தனியார் பேருந்துகள் ஓடவில்லை, வாடகை கார், வேன், ஆட்டோக்கள் இயங்கவில்லை, வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், சிறிய கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
படகு சவாரி இயக்கம்
தேக்கடி ஏரியில் கேரள மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் வெள்ளிக்கிழமை படகு சவாரி நடைபெற்றது, அங்கு விடுதிகளில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் படகு சவாரிக்கு சென்றனர், வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் படகுகள் இயக்கப்பட்டது.
இதையும் படிக்க |எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு: ராகுல்காந்தி எச்சரிக்கை