2025-க்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதுக்குள்பட்ட குழந்தைகள் அனைவரும் எண்ணறிவும் எழுத்தறிவும் பெற்றிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரோனா ஊரடங்கு பிறப்பித்த நேரத்தில் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை ஈடு செய்வதற்கும், எதிர்காலத்திற்கு ஏற்ற சிந்தனைத் திறனைக் கல்வியின் மூலமாக அவர்கள் பெறுவதற்கும் 'எண்ணும் எழுத்தும்' என்கிற இயக்கத்தைத் முதல்வர் இன்று தொடக்கிவைத்தார்.
2022-23-ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1, 2, 3 ஆகிய மூன்று வகுப்புகளில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
இதற்காக தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய மூன்று பாடங்களுக்குப் பயிற்சி நூல்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. பாடமாக மட்டுமல்லாமல், எளிமையான செயல்பாட்டு வடிவத்திலும் பயிற்சி நூல்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக 'எண்ணும் எழுத்தும்' செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், '2025-க்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் எண்ணறிவும் எழுத்தறிவும் பெற்றிருக்க வேண்டும் என்ற மிகத் தேவையான இலக்குடன் "எண்ணும் எழுத்தும்" திட்டத்தைத் தொடங்கிவைத்தேன்.
கற்றலைக் குழந்தைகளுக்கு மகிழ்ச்சிக்குரிய - ஆர்வமூட்டும் செயல்பாடாக மாற்றுவோம்!' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்