சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் பயிலும் திங்கள்கிழமை (ஜூன் 13) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சுட்டிரையில் தெரிவித்ததாவது:
இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன். கரோனா என்ற பெருந்தொற்றால் பள்ளிக்கு நேரில் வந்து பயிலும் முறை தடைபட்டது. இருந்தாலும் இணையவழி மூலமாகக் கல்வி கற்றீர்கள்.
அதேபோல் இருபால் ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளை நோக்கிப் பிள்ளைகள் வருகிறார்கள். அவர்களைக் கனிவுடன் வரவேற்று அரவணைப்புடன் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இதையும் படிக்க: ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தில்லி செல்கிறார்!
தடைபட்ட கல்வியைத் தாராளமாக வழங்கி முழுமைப்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும்! மாநிலம் பயன்பெறட்டும்! என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.