ஜவ்வாது மலை புதூர்நாடு பகுதியில் நிலத்தை உழுது விட்டு வீடு திரும்பிய போது விபரீதம். 15 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து இரண்டு பேர் பலி.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அங்கநாத வலசை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் ஜவ்வாது மலை புதூர் நாடு மலைப்பகுதியில் தன்னுடைய டிராக்டரை எடுத்துக் கொண்டு நிலத்தை உழுது விட்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது சித்தூர் பகுதியை சேர்ந்த மணி என்பவர் தன்னை புதூர் நாடு பகுதியில் இறக்கி விடுமாறு கேட்டு டிராக்டரில் ஏறி உள்ளார்.
இந்நிலையில் சித்தூர் கூட் ரோடு பகுதியில் டிராக்டர் வந்து கொண்டிருந்த போது டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து பக்கத்தில் உள்ள 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததால் டிராக்டரின் உரிமையாளர் கோவிந்தசாமி மற்றும் அதில் உடன் வந்த மணி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
பின்பு தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர், இருவரின் சடலத்தையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே போல் புதூர் நாடு மலை பகுதியில் கோவிலுக்குச் சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 11 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.