திருச்சி: குடமுருட்டி உய்யகொண்டான் கரைகளை பலப்படுத்தும் பணிகளை அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.
காவிரி, டெல்டாவில் ரூ. 80 கோடியில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் குடமுருட்டி, உய்யகொண்டான் கரைகளை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.
திருச்சியில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடும் வகையில் குடமுருட்டி, உய்யகொண்டான் மற்றும் கோரையாற்றின் கரைகளை பலப்படுத்தி சாலை அமைத்தல் குறித்தும் ஆய்வு செய்தனர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படைவசதி மேம்பாட்டு நிறுவனத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் எம். சாய்குமார், நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா, மாவட்ட ஆட்சித்தலைவர் தனசு. சிவராசு, மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் அ. சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், ந. தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.