அவசரத் தேவைகளின்போது பிறர் உயிர் காக்க குருதிக் கொடை அளிப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 ஆம் தேதி ரத்த தான நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அவசரத் தேவைகளின்போது பிற உயிர்களைக் காப்பாற்ற, ரத்த தானம் செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் ரத்த தானத்தை வலியுறுத்தும் பொருட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ''விபத்து, அறுவை சிகிச்சை உள்ளிட்ட அவசரத் தேவைகளின்போது பிறர் உயிர் காக்க குருதி கொடையளிப்போரின் நல்லுள்ளம் போற்றுவோம்!
சாதி - மதம் - நிறம் - பாலினம் என எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை!
குருதிக் கொடையளித்து மனித உயிர் காப்போம்! மானுடம் தழைக்கச் செய்வோம்!' என்று பதிவிட்டுள்ளார்.