கும்பகோணம் அருகே அசூர் கிராமத்தில் சிமெண்ட் கான்கிரீட் கலவை செய்யும் நிறுவனத்தில் கன்வேயர் பெல்ட்டில் அடிப்பட்டு வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அமர்பூர் தோகார் பகுதியைச் சேர்ந்த பிரிஜு (31) கடந்த ஓராண்டாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள அசூர் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான சிமெண்ட் கான்கிரீட் கலவை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இன்று காலை சிமெண்ட் கான்கிரீட் கலவை செய்வதற்காக பிரிஜு வேலை பார்க்கும்போது கலவை இயந்திரத்தின் கன்வேயர் பெல்ட்டில் அடிபட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து சுவாமிமலை காவல் நிலையத்திற்கு புகார் வரவே, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் பிரிஜுவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.