தில்லியில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பணப்பரிமாற்றம் முறைகேடு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்தும், காங்கிரஸ் தலைவர்கள் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும், புதுச்சேரி மாநில காங்கிரசார் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் வியாழக்கிழமை புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலத்தில் இருந்து காங்கிரசார், ஆளுநர் மாளிகை நோக்கி கண்டன பேரணி நடத்தினர். மாநிலத் தலைவர் ஏவி சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி, எம்பி வைத்தியலிங்கம், எம்எல்ஏ வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.
அமலாக்கத் துறை மூலம் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு வரும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைக் கண்டித்தும் கண்டன கோஷமிட்டபடி வந்த காங்கிரசார், அந்த பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
காங்கிரஸ் தலைவர்கள் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புதுச்சேரி மாநில காங்கிரசார்.
கண்டன பேரணி புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே செஞ்சி சாலையில் திரும்பியபோது, புதுச்சேரி பெரிய கடை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இந்த கண்டன பேரணியில் மாநில தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்பி வி.வைத்திலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் 300 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் புதுச்சேரி கரிகுடோன் மையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
அங்கு மத்திய பாஜக அரசை கண்டித்து, முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் கண்டன கோஷமிட்டனர். போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.