
கிருஷ்ணகிரி உழவர் சந்தையில் குளம் போல் தேங்கியுள்ள மழைநீர்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் கிருஷ்ணகிரி உழவர் சந்தையில் மழைநீர் குளம் போல் தேங்கின.
கிருஷ்ணகிரி உழவர் சந்தையானது 2009-ஆம் ஆண்டு 72 கடைகளுடன் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ. 17 லட்சம் மதிப்பில் உழவர் சந்தை வளாகம் புனரமைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் பெய்த மழையால் கிருஷ்ணகிரி உழவர் சந்தையில் மழைநீர் வெளியே செல்லாத நிலையில் குளம்போல் காட்சியளிக்கிறது. கிருஷ்ணகிரி உழவர் சந்தை அருகே புதியதாக குளிர்பதனக் கிடங்கு கட்டப்பட்டுள்ளது.
அந்தக் கிடங்கு கட்டும்போது, உழவர் சந்தையில் இருந்து மழை நீர் வெளியேறும் பகுதியை முற்றிலும் அடைத்து விட்டனர். இதனால் உழவர் சந்தையில் இருந்து மழைநீர் வெளியேறாமல் தேங்கி உள்ளதால் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்க முடியாமலும், பொதுமக்கள் காய்கறிகளை வாங்க இயலாத சூழ்நிலையும் ஏற்பட்டது.
இனிவரும் காலங்களில் உழவர் சந்தை வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க அலுவலர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 7 மணி வரையில் பெய்த மழை அளவு(மில்லி மீட்டரில்) : ஊத்தங்கரை :122, தளி-60, சூளகிரி - 82, பெனுகொண்டபுரம் - 45.2, ராயக்கோட்டை - 39, தேன்கனிக்கோட்டை - 37, ஓசூர் - 33, நெடுங்கல் - 27.80, கிருஷ்ணகிரி - 16.90, போச்சம்பள்ளி - 14.2, பாரூர் - 9.40, அஞ்செட்டி -5.40. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 491.90 மில்லி மீட்டர் மழையும் சராசரியாக 40.99 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...