காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தென் திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் கோயிலில் நடைபெற்று வரும் வைகாசிப் பெருந்திருவிழாவின் முக்கிய விழாவாக வெள்ளிக்கிழமை (ஜூன் 17) நள்ளிரவு வரை தெப்ப உற்சவம் நடைபெற்றது.
ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் மின்னொளியுடன் கூடிய அலங்கார பங்களா தெப்பத்தில் எழுந்தருளி கோயில் திருக்குளத்தில் மூன்று முறை வலம் வந்து 6 படித்துறைகளிலும் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள இக்கோயில் செட்டிநாடு பகுதியில் உள்ள பிரசித்த பெற்ற வைணவ ஸ்தலமாகும்.
இங்கு ஆண்டுதோறும் வைகாசி பெருந்திருந் திருவிழா 15 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த ஜூன் 6-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளிய திருவீதியுலா நடைபெற்றது.
முக்கிய விழாவான 9-ஆம் நாள் தேரோட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) நடைபெற்றது.
தெப்ப உற்சவத்தையொட்டி வானவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.