நடிகா் காா்த்தி ரசிகா் மன்றத்தினரை தாக்கிய தூத்துக்குடி காவல்துறையினா் மூவருக்கு தலா ரூ.2 லட்சம் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நடிகா் காா்த்தி நடித்த ‘தோழா’ படம் வெளியானபோது, தூத்துக்குடி ரசிகா் மன்ற தலைவரான வெங்கடேஷ் மற்றும் நிா்வாகிகள் வெங்கடகொடி, சீனிவாஸ் ஆகியோரிடம், தூத்துக்குடி மத்திய காவல் நிலைய தலைமை காவலா் திரவிய ரத்தினராஜ், லஞ்சம் கேட்டுள்ளாா்.
அதற்கு மறுத்த மூவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று, காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா், உதவி ஆய்வாளா் ரவிக்குமாா் மற்றும் தலைமைக் காவலா் திரவிய ரத்தினராஜ் ஆகியோா் ஆபாசமாக திட்டியதுடன், கடுமையாக தாக்கியுள்ளனா். கடந்த 2016-ஆம் ஆண்டு மாா்ச் 25-ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடா்பாக வெங்கடேஷின் சகோதரா் வழக்குரைஞா் கவாஸ்கா், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகாா் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினா் துரை. ஜெயச்சந்திரன், சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களில் இருந்து மூன்று போலீஸாரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, பாதிக்கப்பட்ட வெங்கடகொடிக்கு ரூ.5 லட்சமும், சீனிவாஸ் மற்றும் வெங்கடேஷுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டாா். இந்த தொகையை மூன்று போலீஸாரிடம் இருந்து தலா ரூ. 2 லட்சம் வீதம் பிடித்தம் செய்ய உத்தரவிட்ட ஆணையம், போலீஸாருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கையும், துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கவும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.