தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் மீண்டும் அதிகரித்து வருவதால் நீதிமன்றங்களில் மீண்டும் கரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கரோனா தொற்று நாளுக்கு நாள் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் மீண்டும் கரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று 2022 ஜீன் 20ஆம் தேதி முதல் நீதிமன்றத்திற்கு வரும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், மேலும் வழக்குக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் நீதிமன்றம் வருவதை தவிர்க்க வேண்டும், போன்ற பல்வேறு நிபந்தனைகளை 2022 ஜூன் 18ஆம் தேதி நிர்வாக நீதிபதி பி.ஏன்.பிரகாஷ் நீதிமன்றத்தில் அறிவுறுத்தினார். மேலும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பதிவாளர் தரப்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
இதன்படி இன்று நீதிமன்றத்தில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள், காவல்துறையினர், வழக்கறிஞர்கள் என அனைவரும் முககவசம் அணிந்து நீதிமன்றத்திற்கு வந்தனர்.
நீதிமன்றத்திற்குள் வரும் அனைவரும் முக கவசம் அணிந்து வருகிறார்களா? என்பதை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்து நீதிமன்றத்திற்குள் அனுமதித்தனர்.
மேலும் நீதிமன்றத்திற்கு வரும் பார்வையாளர்கள், காவல்துறையினர் தனிவழி அமைக்கப்பட்டு நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
வெளிநபர்கள், பார்வையாளர்கள், பொதுமக்கள், காவல்துறையினர் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வரும் பொழுது அவர்கள் முழுமையான சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டனர்.
இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 12,781 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 692 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.