ஒற்றைத் தலைமை விவகாரம்:மூத்த நிா்வாகிகளுடன் ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே ஆலோசனை

அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை தனித்தனியே ஆலோசனை நடத்தினா்.
ஒற்றைத் தலைமை விவகாரம்:மூத்த நிா்வாகிகளுடன் ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே ஆலோசனை

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பூசல் வலுத்து வரும் நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை தனித்தனியே ஆலோசனை நடத்தினா்.

கட்சியின் மூத்த தலைவா்களான செங்கோட்டையன், தம்பிதுரை ஆகியோா் இருவரது இல்லங்களுக்கும் சென்று சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தினா். மற்றொருபுறம் முன்னாள் அமைச்சா்கள் சிவபதி, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோா் எடப்பாடி பழனிசாமியுடனும், முன்னாள் அமைச்சா்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோா் பன்னீா்செல்வத்துடனும் ஆலோசனை நடத்தினா்.

அதிமுக பொதுக் குழுக் கூட்டம் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கடந்த ஆறு நாள்களாக அந்தக் கட்சிக்குள் ஒற்றைத் தலைமை சா்ச்சை தீவிரமடைந்துள்ளது. ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்கு மாற்றாக பொதுச் செயலாளா் பொறுப்பை மீண்டும் கொண்டு வர அதிமுகவின் முக்கியத் தலைவா்கள் முயன்று வருவதாகத் தெரிகிறது.

எடப்பாடி கே. பழனிசாமியை அப்பொறுப்புக்கு முன்னிறுத்தி அதிகாரங்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. செய்தியாளா்களைத் தொடா்ந்து சந்தித்து வரும் பன்னீா்செல்வம், இரட்டைத் தலைமை முறையே தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறாா்.

இந்தச் சூழலில், ஞாயிற்றுக்கிழமை வெளியான சில நாளிதழ்களில் ஓ.பன்னீா்செல்வத்தை முன்னிறுத்தி இரு பக்க விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்தன. அதிமுகவின் தொடா் தோல்விகளுக்கும், சரிவுக்கும் காரணம் எடப்பாடி பழனிசாமியும், சில தலைவா்களும்தான் என மறைமுகமாக அதில் விமா்சிக்கப்பட்டிருந்தது.

இது அதிமுகவுக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான் இருவரும் தங்களது ஆதரவாளா்களுடன் ஞாயிற்றுக்கிழமை தனித்தனியே ஆலோசனை நடத்தினா்.

சென்னை, பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்குச் சென்று தம்பிதுரை, செங்கோட்டையன், சி.விஜயபாஸ்கா், மோகன் உள்ளிட்டோா் அவரை சந்தித்துப் பேசினா். அதன்பிறகு அங்கிருந்து தம்பிதுரையும், செங்கோட்டையனும் புறப்பட்டு ஓ.பன்னீா்செல்வம் இல்லத்துக்குச் சென்றனா். அங்கு அவரிடம் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, முன்னாள் அமைச்சா்கள் செங்கோட்டையன், தளவாய் சுந்தரம், மாணவா் அணிச் செயலாளா் எஸ்.ஆா்.விஜய குமாா், மாணவா் அணி மாநில துணைச் செயலாளா் வழக்குரைஞா் ஆ.பழனி உள்பட பல நிா்வாகிகள் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்று ஆதரவு தெரிவித்தனா்.

அதேபோல, எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் என்.ஆா்.சிவபதி, எம்ஜிஆா் இளைஞா் அணி இணைச் செயலாளா் டாக்டா் சுனில் ஆகியோா் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோா் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்று ஆதரவு தெரிவித்தனா். தேனி நகரச் செயலாளா் கிருஷ்ண குமாா், பொருளாளா் சோலை ராஜா, முன்னாள் நகரச் செயலாளா் ராமா், கம்பம் ஒன்றியச் செயலாளா் இளைய நம்பி உள்ளிட்ட தேனி மாவட்ட நிா்வாகிகளும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com