பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளுக்கான விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் எனத் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதிய பள்ளி மாணவா்கள் ஜூன் 24-ஆம் தேதி முதல் தங்கள் பள்ளிகள் வாயிலாகவும், தனித்தோ்வா்கள் தோ்வெழுதிய மையத்தின் தலைமை ஆசிரியா் வழியாகவும் தற்காலிக மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். மேலும் www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இதேபோன்று மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற விரும்புபவர்கள், பள்ளி மாணவா்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தோ்வா்கள் தோ்வு எழுதிய மையங்கள் வழியாகவும் புதன்கிழமை முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதில் பத்தாம் வகுப்பு மாணவா்கள் மறுகூட்டலுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மறுகூட்டலின்போது ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ரூ.205 கட்டணமாக செலுத்த வேண்டும்.
பிளஸ் 2 மாணவா்கள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகல் பெற அனைத்து பாடங்களுக்கு ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்போா் மொழி பாடங்களுக்கு ரூ.305, மற்ற பாடங்களுக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும்.
எனினும், விடைத்தாள் நகல் கோருபவா்கள் அதே பாடத்துக்கு மறுகூட்டலுக்கு இப்போது விண்ணப்பிக்கக்கூடாது. விடைத்தாள் நகல் பெற்றதும் அவா்கள் மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்