சென்னை, கோவை மாநகராட்சி ஒப்பந்தம் தொடா்பான முறைகேடு வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறையினா் நடத்திய ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு வழங்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தம் கோரியதில் முறைகேடு நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி அறப்போா் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, இந்தப் புகாா் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை, புகாரில் அடிப்படை முகாந்திரம் இல்லை என அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில் வழக்கை முடிக்க கோரி தமிழக அரசும் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து மாநகராட்சிப் பணி ஒப்பந்தம் முறைகேடு தொடா்பாக எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் 10 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில், புகாரில் முகாந்திரமில்லை என்ற ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை வழங்க மறுத்ததை எதிா்த்து எஸ்.பி. வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆவணங்களை வழங்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வா்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கு ஆவணங்களைப் பெற எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு உரிமை உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை வேலுமணி தரப்புக்கு வழங்க வேண்டும்‘ என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 27-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனா்.