அடுத்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் 'ஒற்றைத் தலைமை' தீர்மானம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. ஓபிஎஸ் ஒப்புதல் அளித்துள்ள தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுவதாக பொதுக்குழு அறிவித்துள்ளது.
மேலும் பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பாலானோர் ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அடுத்த பொதுக்குழு கூட்டம் வருகிற ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் 'ஒற்றைத் தலைமை' தீர்மானம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், 'பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டுவர கோரிக்கை வைத்துள்ளனர். அடுத்த பொதுக்குழுவை சுமூகமாக நடத்துவோம்' என்று கூறியுள்ளார்.
அதுபோல, முன்னாள் அமைச்சர்களும் இபிஎஸ் ஆதரவாளர்களுமான எம்.ஆர். விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கண்டிப்பாக அடுத்த பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறினர்.
இதையும் படிக்க | ஓரங்கட்டப்படுகிறாரா ஓபிஎஸ்?