பிள்ளைகளின் திருமண அழைப்பிதழில் நெருங்கிய உறவினர்களின் பெயர்களையே போடுவதற்கு யோசிக்கும் இந்த காலகட்டத்தில் ஜாதி, மதம், கட்சி என எவ்வித பாகுபாடின்றி ஊர் மக்கள் அனைவரின் பெயரையும் தனது மகளின் திருமண அழைப்பிதழில் அச்சடித்து அனைவரும் ஒரே குடும்பம் என்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் மல்லபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அருகே உள்ள மல்லபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு ஊராட்சி மன்ற தலைவராக ரமேஷ் என்பவர் உள்ளார். இரண்டாவது முறையாக மீண்டும் இவரே சுயேட்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மல்லபுரம் ஊராட்சியில் கச்சுகட்டு, திருமலைராஜபுரம், கீழ திருமலைராஜபுரம், வில் வேலங்குடி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய 900 குடும்பங்கள் உள்ளன.
இதையும் படிக்க | மீண்டும் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படுமா?
இந்நிலையில், இவரது மகள் ஷாலினி கைலாஷ் திருமண விழா வருகிற 24-ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெற உள்ளது. இதற்காக, திருமண அழைப்பிதழ் அச்சடித்த ரமேஷ், அதில் ஊர் மக்களின் பெயர்களையும், உறவினர்களின் பெயர்களை போன்றே அச்சடித்து அனைவருக்கும் வழங்கி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகளின் திருமண அழைப்பிதழில் ஊராட்சியில் உள்ள 900 குடும்பத்தின் தலைவர் மற்றும் தலைவி பெயர்கள் அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்.
ஊராட்சியில் உள்ள 900 குடும்பத்தினருக்கும் வீடு வீடாகச் சென்று தனது மகளின் திருமண அழைப்பிதழ் கொடுத்து வருகிறார். அந்த திருமணஅழைப்பிதழில் 900 குடும்பத்தின் தலைவர் மற்றும் தலைவி பெயர்களை, தங்கள் நல்வரவை விரும்பும் உறவினர்கள் என அச்சடித்துள்ளார்.
ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் கொடுத்த திருமண அழைப்பிதழை பார்த்த ஊர் மக்கள், ஆச்சரியப்படுவதுடன் உறவினர்களே அழைப்பிதழ்களில் பெயர் போடுவதற்கு யோசிக்கும் இந்த காலகட்டத்தில் ஜாதி, மதம், கட்சி என எவ்வித பாகுபாடுமின்றி ஊர் மக்கள் அனைவரின் பெயரையும் தனது குடும்ப திருமண அழைப்பிதழில் அச்சடித்து அனைவரும் ஒரே குடும்பம் என்ற மகிழ்ச்சியை அளித்துள்ளார்.
மேலும், இந்த திருமணம் எங்களுடைய வீட்டில் நடப்பது போல் எங்கள் பெயரையும் பத்திரிக்கையில் போட்டது தங்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக இவ்வூர் மக்கள் ஊராட்சி மன்ற தலைவரை பாராட்டி வருகிறனர்.
இதையும் படிக்க | ஓரங்கட்டப்படுகிறாரா ஓபிஎஸ்?