அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியும் தனித்தனியே சிறப்பு பூஜைகள் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒற்றைத் தலைமை தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெறுகிறது.
இதையும் படிக்க | பொதுக்குழுவிற்கு புறப்பட்ட ஓபிஎஸ், இபிஎஸ்
இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இடையே கடந்த சில தினங்களாக மோதல் போக்கு நீடித்துவந்தது. மேலும் பொதுக்குழுவில் அதிமுகவின் அமைப்புவிதிகளில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளத் தடை கோரிய வழக்கில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகியுள்ளது இபிஎஸ் தரப்பை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக சென்னையில் இருவரும் தனித்தனியே சிறப்புப் பூஜைகள் மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது சென்னை இல்லத்தில் பசுவை வரவழைத்து பூஜை மேற்கொண்டதாகவும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி சிறப்பு யாகம் மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.