கோவை: கோவையில் 2018-22 ஆண்டுக்குள் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் திருமணமாகாத மாற்றுத்திறனாளி பெண் ஒருவர். இவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை பேரூர் அருகே உள்ள பாதியளவு கட்டிமுடிக்கப்பட்ட வீட்டில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரும், அவருடன் ஒரு ஆண் வசித்து வருவதாகவும், அந்த பெண் பாலியல் ரீதியாக துண்புறுத்தப்படுகிறாரா? என்ற சந்தேகம் உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க.. முதல் சுற்றில் இ.பி.எஸ். வெற்றி?
இது குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரண் உத்தரவின் பேரில் சமூக நலத்துறை மாவட்ட அலுவலர் தங்கமணி தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது புகாரில் தெரிவிக்கப்பட்டது போலவே சிறிய வீட்டில் மாற்றுத்திறனாளி பெண் இருந்துள்ளார். அப்போது அங்குச் சென்ற அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கடந்த 2018 – 2020-ஆம் ஆண்டுகளுக்குள் ஏற்கனவே இரண்டு குழந்தைகள் பிறந்தது தெரியவந்தது. மேலும் தற்போது இருக்கும் அந்த வீட்டில் கடந்த 6 மாதங்களாக வசித்து வருவதாகவும், கடந்த சில நாள்களுக்கு முன்பு, அந்தப் பெண்ணிற்கு மூன்றாவது குழந்தையும் பிறந்ததாகவும் அந்தக் குழந்தை உக்கடம் பகுதியில் உள்ள காப்பகத்தில் இருப்பதும் தெரியவந்தது.
மேலும் திருமணம் ஆகாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் ரீதியாக துண்புறுத்தியது யார்? அவருடன் வசித்து வந்தவர் அவரது தந்தையா? என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணும் உடல் ரீதியாக வலுவில்லாமல் இருந்ததால் அவரை மீட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் நல்லாம்பாளையத்தில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.
இதையடுத்து சமூக நலத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் பேரூர் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.