கவியரசர் கண்ணதாசன் 96-வது பிறந்த நாள் விழாவையொட்டி, காரைக்குடியில் நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழக அரசு சார்பில் கவியரசர் கண்ணதாசனுக்கு மணிமண்டபம், அவரது அரை திருவுருவச்சிலை அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு கவியரசர் கண்ணதாசன் 96-வது பிறந்தநாள் விழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலையில் அரசு சார்பில் அவருக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம், காரைக்குடி எம்.எல்.ஏ எஸ். மாங்குடி, காரைக்குடி நகர்மன்றத் தலைவர் எஸ். முத்துத்துரை, துணைத்தலைவர் என். குணசேகரன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி, கண்ணதாசன் மகள் விசாலாட்சி பழனியப்பன், கவிஞர் செல்லகணபதி, கவிஞர் அரு. நாகப்பன், நகரின் முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கவியரசர் கண்ணதாசன் உருவச்சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்த அமைச்சர்கள், கண்ணதாசன் மணிமண்டபத்தில் வைக்கப்பட்ட கண்ணதாசன் தொடர்பான புகைப்படங்களை பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்த பதிவேட்டில் கண்ணதாசன் குறித்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
நிகழ்ச்சியில் காரைக்குடி நகர்மன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.